எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆர்தர் ஜாக்சன்கட்டுரைகள்

என்னை சுத்திகரியும்

"என்னை சுத்தம் செய்!" என்ற வார்த்தைகள் எனது வாகனத்தில் எழுதப்படவில்லை என்றாலும், என் வாகனம் அதை வெளிப்படுத்தியது. எனவே, நான் கார் கழுவுவதற்குச் சென்றேன். சமீபத்திய பனிப்பொழிவின் காரணத்தினால், உப்பு நீர் நிறைந்த சாலைகளில் இருந்த மோசமான அசுத்தங்களிலிருந்து நிவாரணம் பெற விரும்பும் பிற ஓட்டுநர்களும் வந்து தங்கள் வாகனங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். எங்களுக்கு முன்பே நீளமான வரிசையில் வாகனங்கள் சுத்தப்படுத்தப்படுவதற்காக இருந்தன. சேவையோ மெதுவாக இருந்தது. ஆனால் அக்காத்திருப்பு நல்லது. நான் ஒரு சுத்தமான வாகனத்துடன் புறப்பட முடிந்தது. சேவை தாமதத்தின் காரணமாக, கார் சுத்தம் செய்ததற்கான பணமும் இலவசமாக்கப்பட்டது!

 

வேறொருவரின் செலவில் சுத்தம் செய்யப்பட்டது. இதுதான் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி. தேவன், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நம் பாவங்களுக்கு மன்னிப்பை வாங்கித்தந்தார். வாழ்க்கையின் "அழுக்கு மற்றும் கறைகள்" நம்மில் ஒட்டிக்கொண்டிருக்கும்போது "குளிப்பதன்" அவசியத்தை நம்மில் யார் உணராமல் இருக்கிறோம்? எப்பொழுது நம் சுயநல எண்ணங்கள், செயல்கள் பிறருக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள் தேவனுடனான நம் அமைதியைப் பறித்திருக்கிறது? தாவீது சங்கீதம் 51ல், சோதனை தன்னை மேற்கொண்டபோது அவன் அழுததை குறிப்பிடுகிறார். ஆவிக்குரிய ஆலோசகர் தேவனுக்கு விரோதமான அவன் பாவத்தை அவனுக்கு உணர்த்திய போது (2 சாமுவேல் 12 பார்க்கவும்), அவன் தேவனிடம் "என்னை சுத்திகரியும்”என ஜெபிக்கிறான்: ”நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.”(வ.51:7). உங்களிடம் பாவம் மற்றும் குற்ற உணர்வு இருக்கிறதா? இயேசுவிடம் உங்கள் வழியை செவ்வைப்படுத்தி, இவ்வசனத்தை நினைவில் வையுங்கள்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்”. (I யோவான் 1:9)

குறுஞ்செய்திகள், பிரச்சினைகள் மற்றும் ஜெயம்

ஜிம்மி, சமூக பிரச்சனைகள், அபாயங்கள், மற்றும் பிரச்சனைகள் நிறைந்திருக்கும் உலகத்தின் ஏழ்மையான நாட்டில் ஊழியம் செய்துகொண்டிருக்கும் தம்பதியினரை உற்சாகப் படுத்துவதற்காக அங்கு கடந்து சென்றார். அவர் அனுப்பிய குறுச்செய்திகளிலிருந்து அவர் கடந்துபோன கடினமான பாதைகளை நாங்கள் அறிந்துகொண்டோம்: “சரி நண்பர்களே, ஜெபத்தை ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. கடந்த இரண்டு மணி நேரத்தில் நாம் பத்து மைல் தூரத்தைக் கடந்திருக்கிறோம்... அதற்கிடையில் நம்முடைய கார் பன்னிரண்டு தரம் சூடாகிவிட்டது.” வாகன பிரச்சனைகளில் சிக்கி, ஐந்து மணி நேரமாய் அவருடைய செய்திக்காய் காத்திருந்தவர்களை சந்திக்க நள்ளிரவில் வந்து சேர்ந்தார். அதற்கு பின்பதாய் வித்தியாசமான குறுச்செய்திகளை காண நேர்ந்தது. “ஆச்சரியம், அழகான ஒரு ஐக்கியம்... ஜெபம் செய்துகொள்வதற்காக பன்னிரெண்டு பேர் ஒப்புக்கொடுத்து முன்னுக்கு வந்தார்கள். அது ஒரு வல்லமையான இரவாய் அமைந்தது.” 

தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்வது ஒரு சவால். எபிரெயர் 11ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றிருக்கும் விசுவாச வீரர்கள் இதை அங்கீகரித்துக்கொள்வார்கள். தங்கள் விசுவாசத்தினிமித்தம், சாதாரண மனிதர்கள் சங்கடமான பல சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கின்றனர். “வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்” (வச. 36). அந்த சவால்களை மேற்கொள்ளும்படிக்கு அவர்களுடைய விசுவாசம் அவர்களை நெருக்கி ஏவியது. நமக்கும் அப்படித்தான். நம் நம்பிக்கையை நம்பி வாழ்வது நம்மை ஆபத்தான இடங்களுக்கோ அல்லது வெகுதூரத்திற்கு அழைத்துச் செல்லாமல் போகலாம், ஆனால் அது நம்முடைய தெருக்களுக்கு, வளாகங்களுக்கு, உணவு அறைக்கு அல்லது அலுவலக அறைகளுக்குள் அழைத்துச் செல்லலாம். அது ஒருவேளை அபாயகரமானதாய் இருக்கலாம். ஆனால் நாம் துணிகரமாய் எடுக்கும் அந்த அபாயகரமான முயற்சிகளுக்கு தகுதியான வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்வோம் என்பது அதிக நிச்சயம்.

இயேசுவுக்காய் நிற்கும் துணிச்சல்

கி.பி. 155 இல், ஆதித்திருச்சபையின் தந்தையான பாலிகார்ப், கிறிஸ்துவை விசுவாசித்ததினால் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதாக அச்சுறுத்தலுக்கு ஆளானார். பாலிகார்ப் அவர்களிடம், “எண்பத்தாறு ஆண்டுகளாக நான் அவருடைய ஊழியக்காரனாக இருந்தேன்; அவர் எனக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. என்னைக் காப்பாற்றிய என்னுடைய ராஜாவை இப்போது நான் எப்படி நிந்திக்க முடியும்?” என்று பதிலளித்தாராம். நம் ராஜாவாகிய இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக நாம் கடுமையான சோதனையை எதிர்கொள்ளும்போது, பாலிகார்ப்பின் இந்த பதில் நமக்கு உத்வேகமாக இருக்கும்.

இயேசுவின் மரணத்திற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்பாக, பேதுரு துணிச்சலாக, “உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்” (யோவான் 13:37) என்று சொல்லுகிறான். பேதுரு தன்னை அறிந்ததைக் காட்டிலும், பேதுருவை நன்கு அறிந்த இயேசு அவனைப் பார்த்து, “சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (வச. 38) என்றார். ஆனாலும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின்பாக, இயேசுவை மறுதலித்த அதே பேதுரு அவரை மகிமைப்படுத்தும் விதமாக, தன்னுடைய ஜீவனையே கொடுக்கிறான் (21:16-19). 

நீங்கள் பாலிகார்ப்பா? அல்லது பேதுருவா? சிலவேளைகளில் நம்மில் பெரும்பாலானோர் பேதுருவைப் போல துணிச்சல் இல்லாமல், கிறிஸ்துவின் விசுவாசியாய் செயல்படாமல் கோழையாக இருக்கிறோம். அதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் வகுப்பறையில் இருந்தாலும், அலுவலகத்தில் இருந்தாலும், எங்கிருந்தாலும் நாம் பயப்படத்தேவையில்லை. அதுபோன்ற தோல்விகள் நமக்கு நேரிடும்போது, நமக்காக மரித்து இன்னும் ஜீவித்துக்கொண்டிருக்கிற இயேசுவிடம் ஜெபத்தில் அணுகுவோம். அவர் நமக்கு உண்மையுள்ளவராய் வெளிப்பட்டு, கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும் அவருக்காக துணிச்சலாய் நிற்க கிருபை செய்வாராக. 

சோர்வின் கூடாரங்கள்

“இந்த கூடாரம் சோர்ந்துபோயிருக்கிறது.” இந்த வார்த்தைகளை கென்யாவின் நைரோபி என்ற பகுதியில் போதகராய் ஊழியம் செய்துகொண்டிருக்கிற பால் என்ற என்னுடைய சிநேகிதர் சொன்னார். 2015ஆம் ஆண்டிலிருந்து அவருடைய திருச்சபை விசுவாசிகள் ஒரு கூடாரம் போன்ற அமைப்பிலிருந்தே ஆராதனை செய்துகொண்டிருக்கிறார்கள். தற்போது பால், “எங்களுடைய கூடாரம் கிழிந்துவிட்டது, மழைபெய்யும்போது அது ஒழுகுகிறது” என்று சொன்னார்.  

பெலவீனமான அந்த கூடாரத்தைக் குறித்து என்னுடைய சிநேகிதர் சொன்ன அந்த வார்த்தைகள் மனுஷ வாழ்க்கையின் பெலவீனமான பக்கத்தைக் குறித்து பவுல் அப்போஸ்தலர் சொன்ன வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்திற்று. “எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும்... இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்” (2 கொரிந்தியர் 4:16; 5:4). 

இவ்வுலக வாழ்வின் பெலவீனமான பக்கத்தை நம்முடைய இளம்பிராயத்திலேயே ஓரளவிற்கு நாம் புரிந்துகொள்ள நேர்ந்தாலும், நாம் முதிர்வயதை சந்திக்கும்போதே அதைக் குறித்த விழிப்புணர்வை பெறுகிறோம். காலம் நம்மை விட்டு வேகமாய் கடந்துசெல்லுகிறது. நம்முடைய இளமைப்பருவத்தில் நாம் முதுமையைக் குறித்து சிந்திக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது (பிரசங்கி 12:1-7). நம்முடைய சரீரமாகிய கூடாரம் சோர்ந்துபோய்விடுகிறது. 

கூடாரம் சோர்ந்துபோகலாம் ஆனால் நம்பிக்கை சோர்ந்துபோகக் கூடாது. நமக்கு வயதாகும்போது நம்பிக்கையும் இருதயமும் பெலவீனமடையவேண்டிய அவசியமில்லை. “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை” என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார் (2 கொரிந்தியர் 4:16). நம்முடைய சரீரத்தை உண்டாக்கிய ஆண்டவர், அவருடைய ஆவியின் மூலம் அதற்குள் வாசமாயிருக்கிறார். இந்த சரீரம் நம்மோடு வெகுகாலம் ஒத்துழைக்காது. “தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று” அறிந்து செயல்படுவோம் (5:1). 

இயேசுவிடம் ஓடுதல்

பாரீஸ_க்கு ஒரு பயணத்தில், பென்னும் அவனது நண்பர்களும் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகம் ஒன்றிற்கு சென்றிருந்தனர். அவன் ஓவியக்கலை மாணவனாய் இல்லாதபோதிலும், யூஜின் பர்னாண்ட் வரைந்த “உயிர்த்தெழுந்த நாளின் அதிகாலையில் கல்லறைக்கு ஓடிய பேதுருவும் யோவானும்” என்று தலைப்பிடப்பட்ட அந்த ஓவியத்தைக் கண்டு ஆச்சரியத்தில் வியந்தான். வார்த்தைகளை பகிராத அந்த ஓவியத்தில் இடம்பெற்றிருந்த பேதுரு மற்றும் யோவானின் முகங்கள் எண்ணற்ற உணர்வுகளை பகிருகின்றது. பார்வையாளர்களை அவர்களின் உணர்வுக்குள் நிறுத்தி, அவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது. 

யோவான் 20:1-10இன் பிரகாரம், அந்த ஓவியமானது இயேசுவின் வெறுமையான கல்லறைக்கு நேராய் ஓடிய இரண்டுபேரை காண்பிக்கிறது (வச. 4). அந்த பிரம்மாண்ட ஓவியம் உணர்ச்சிபொங்கிய இரண்டு சீஷர்களின் உணர்வுகளை படம்பிடித்திருக்கிறது. அந்த கட்டத்தில் அவர்களுடைய விசுவாசம் இன்னும் முழுமைபெறவில்லையெனினும், அவர்கள் சரியான திசையை நோக்கி ஓடினார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவும் அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக் காண்பித்தார் (வச. 19-29). அவர்களுடைய இந்த தேடுதல், நூற்றாண்டுகளாய் இயேசுவைத் தேடுவோரின் தேடலுக்கு ஒத்தது. இயேசுவின் கல்லறை அருகே அக்காலகட்டத்தில் நாம் இல்லாதிருந்தாலும், அந்த அழகான ஓவியத்தை நாம் பார்த்திராவிடினும், நற்செய்தியை நம்மால் தெளிவாய் பார்க்கமுடியும். நமக்கு சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் குழப்பங்கள் இருந்தாலும், இயேசுவும் அவருடைய அன்பும் இருக்கும் திசை நோக்கி ஓடுவதற்கு வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாளைக்கு உயிர்தெழுதலின் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும்போது, “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (எரேமியா 29:13) என்னும் வார்த்தையை நினைவுகூருங்கள். 

அழுத்தப்படுகையில்

பல ஆண்டுகளுக்கு முன்பு, பல சாலைகள் குறுக்கிடும் ஒரு தெருவைக் கடக்க முயன்றபோது அவள் எவ்வளவு பயந்தாள் என்று தோழி என்னிடம் கூறினாள். "இது போன்ற எதையும் நான் பார்த்ததில்லை; தெருவைக் கடப்பதற்கு எனக்கு கற்பிக்கபட்ட விதிகள் பயனற்றதாகத் தோன்றியது. நான் மிகவும் பயந்து போனேன், நான் மூலையில் நின்று, பேருந்திற்காகக் காத்திருந்து, தெருவின் மறுபக்கம் கடக்க அனுமதிப்பீர்களா என்று பேருந்து ஓட்டுநரிடம் கேட்பேன். இந்தச் சந்திப்பில் பாதசாரியாகவும், பின்னர் ஓட்டுநராகவும் வெற்றிகரமாகச் செல்ல நான் கற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும்" என்றாள்.

ஆபத்தான போக்குவரத்து சந்திப்பு எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும், வாழ்க்கையின் சிக்கல்களில் வழிநடப்பது இன்னும் அச்சுறுத்தலாக இருக்கலாம். சங்கீதம் 118 இல் உள்ள சங்கீதக்காரரின் சூழ்நிலை பற்றி நமக்குத் தெரியாது, ஆனால் அது கடினமானது மற்றும் ஜெபத்திற்கு ஏற்றது என்பதை அறிவோம்: "நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்" (வ.5) என்று சங்கீதக்காரர் கதறினார்.  மேலும் தேவன் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது "கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்.. எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்" (வ.6–7).

வேலை, படிப்பு அல்லது வீடுகளை மாற்ற வேண்டியிருக்கும் போது பயப்படுவது சாதாரணமானது. உடல்நலம் குறைகையில், உறவுகள் மாறுகையில், அல்லது பணம் கரைகையில்  கவலைகள் மேலோங்கும். ஆனால் இந்த சவால்களுக்கு, நாம் தேவனால் கைவிடப்பட்டதாக அர்த்தம் இல்லை. நாம் அழுத்தப்படுகையில், ​​ஜெபத்துடன் அவருடைய பிரசன்னத்திற்கு அழுத்தம் கொடுப்பவர்களாக இருப்போமாக.

உனக்கும் எனக்குமான இரக்கம்

கோவிட்-19 தொற்றுநோயின் விளைவுகளில் ஒன்றாக, உல்லாசக் கப்பல்களை நிறுத்தி, பயணிகளை தனிமைப்படுத்தினர். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிக்கை சில சுற்றுலாப் பயணிகளின் நேர்காணல்களை உள்ளடக்கிய ஒரு கட்டுரையை வெளியிட்டது. தனிமைப்படுத்தப்பட்ட இந்த தருணங்கள் அதிகம் பேசுவதற்கான வாய்ப்பாய் இருந்தது என்று சொன்ன ஒரு பயணி, தன்னுடைய மனைவியைக் குறித்து சொல்லும்போது, அவர் செய்த தப்பிதங்கள் அனைத்தையும் நினைவில் வைத்திருக்கிற அவளுடைய நியாபகச் சக்தியை வேடிக்கையாய் எடுத்துச் சொன்னார். 

இது போன்ற பதிவுகள் நம்மை சிரிக்க வைக்கலாம், நமது மனிதநேயத்தை நினைவூட்டலாம். நாம் வெளியே சொல்லவேண்டிய விஷயங்களை மிகவும் இறுக்கமாக நமக்குள்ளே வைத்திருக்கும் நம்முடைய சுபாவத்தின் எச்சரிப்பாகவும் இருக்கலாம். ஆயினும், நம்மைத் துன்புறுத்துபவர்களிடம் கனிவாக இருக்க எது நமக்கு உதவுகிறது? சங்கீதம் 103:8-12 நம்முடைய பெரிய தேவனை குறித்து சித்தரிப்பதுபோன்ற எண்ணங்களேயாகும். 

8-10 வசனங்கள் சொல்லுவது கவனத்தில்கொள்ள வேண்டும்: “கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.” நாம் ஜெபத்துடன் வேதத்தை வாசிக்கும்போது தேவனுடைய உதவியை நாடுவது என்பது சிலவேளைகளில் அவர்களை தண்டிக்கும் தவறான பாதைக்கு நம்மை திசைதிருப்பலாம். இது நமக்காகவும், நாம் காயப்படுத்த நினைப்பவர்களுக்காகவும் கிருபையோடும் இரக்கத்தோடும் மன்னிப்பை செயல்படுத்துவதற்கு உதவுகிறது. 

ஆசீர்வாதமான மனந்திரும்புதல்

கிரேடி, கேட்பவர்கள் எல்லோருக்கும் தன்னை “உடைந்தது” (BROKE) என்று தன்னுடைய தெருப் பெயரை பெருமையுடன் அடையாளப்படுத்திக்கொள்வான். அவனுடைய அடையாள அட்டையிலும் அதைப் பொறித்திருந்தான். அவன் சூதாட்டம், விபச்சாரம், ஏமாற்றுதல் போன்ற செய்கைகளில் ஈடுபட்ட நடுத்தர வயது கொண்டவன். அவன் உடைக்கப்பட்டவனாகவும், தேவனை விட்டு தூரமாகவும் வாழ்ந்தான். ஆனால் ஒரு மாலை நேரத்தில் ஒரு ஹோட்டல் அறையில், தேவனுடைய ஆவியானவரால் ஏற்பட்ட உணர்த்துதலினால், அனைத்தும் மாறியது. “நான் இரட்சிக்கப்படுகிறேன் என்று நினைக்கிறேன்” என்று தன் மனைவியிடம் கூறினான். அன்று மாலை அவன் பாவங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்காக இயேசுவிடம் ஒப்புக்கொடுத்தான். நாற்பது வயதை தாண்டமாட்டோம் என்று எண்ணிய இவன், அடுத்த முப்பது வருடங்கள் விசுவாசியாக மாறி, தேவனுக்கு ஊழியம் செய்தான். அவரது ஓட்டுனர் உரிமத்தில், “உடைந்தது” என்ற வாசகம், “மனந்திரும்பு” (REPENT) என்று மாற்றப்பட்டது. 

“மனந்திரும்பு.” அதைத் தான் கிரேடி செய்தான். அதைத்தான் இஸ்ரவேலர்கள் செய்யவேண்டும் என்று ஓசியா 14:1-2 சொல்லுகிறது. “இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு... வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்;.” சிறியதோ, பெரியதோ, நம்முடைய பாவங்கள் எப்படிப்பட்டதாயிருப்பினும், அது நம்மை தேவனிடத்திலிருந்து பிரிக்கிறது. ஆனால் பாவத்திலிருந்து மனந்திரும்பி, இயேசுவின் மரணத்தின் மூலம் சாத்தியமாக்கப்பட்ட மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும்போது, அந்த பிரிவு மாற்றப்படுகிறது. நீங்கள் போராட்டத்தை மேற்கொள்ளுகிறவரோ, அல்லது கிரேடியைப் போன்ற வாழ்க்கை வாழ்பவரோ, யாராக இருப்பினும், உங்களுக்கான மன்னிப்பை ஒரு ஜெபத்தின் மூலம் சாத்தியமாக்கலாம். 

ஆழத்திலிருந்து மீட்பு

2015 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், சென்னையில், 24 மணிநேரத்தில் 494 மி.மி என்ற அளவில் மழை கொட்டியது. மழை மாத்திரமின்றி சில நீர்த்தேக்கங்களும் திறக்கப்பட்டதால் சென்னை வெள்ளக்காடாகியது. 250க்கும் மேற்பட்ட ஜனங்கள் மரிக்கவே, சென்னை "பேரிடர் மண்டலமாக" அறிவிக்கப்பட்டது. இயற்கை சென்னையை வெள்ளத்தால் மூழ்கடிக்க, மீனவர்களோ நகரத்தை தங்கள் கருணைச் செயல்களால் நிறைத்தனர்.

மீனவர்கள், சுமார் 400 பேருக்கும் அதிகமானவர்களை துணிச்சலுடன் மீட்டனர். அநேக வீடுகள் தண்ணீரில் மூழ்கி, வாகனங்கள் மிதந்து கொண்டிருந்தன. தங்களை அர்ப்பணித்த இந்த மீனவர்களின் கருணையும், திறமையும்மட்டுமில்லையெனில் மரித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாயிருக்கும். பொதுவாக வாழ்வில் இதுபோன்ற புயல்களை நாம் அனுபவித்திருக்க மாட்டோம், ஆனால் நம்பிக்கையிழக்கும் நாட்களை நாம் நிச்சயமாக சந்தித்திருப்போம். அப்போது பாதுகாப்பற்றவர்களாய் உணர்விலும், மனதிலும், ஆவியிலும் பாதிக்கப்பட்டிருப்போம். வெள்ளம் நம் தலைமேல் புரண்டோடும். ஆனால் நாம் விரக்தியடையத் தேவையில்லை.

சங்கீதம் 18 ல், தாவீதின் எதிரிகள் அநேகராயும், பலவான்களாயும் இருந்ததை வாசிக்கிறோம். ஆனால், தேவன் அவர்கள் அனைவரிலும் பெரியவராய் இருந்தார். எவ்வளவு பெரியவர்? மிகப்பெரியவரும், மிக வல்லவருமாய் இருந்தார் (வ.1). எனவே அவரை வர்ணிக்க தாவீது பல உருவகங்களைப் பயன்படுத்துகிறார் (வ.2). ஆழமான ஜலப்பிரவாகத்தினின்றும், பலமான சத்துருக்களிடமிருந்தும் இரட்சிக்கத் தேவன் வல்லவராய் இருக்கிறார் (வ.16–17). அவர் எவ்வளவு பெரியவர்? நம் வாழ்வை மூழ்கடிக்கும் ஜலப்பிரவாகம் பெரிதாயும் ஆழமானதாயுமிருந்தாலும், இயேசுவென்ற அவர் நாமத்தை நாம் கூப்பிடுகையில், நமக்குப் போதுமானவராய் இருக்கிற பெரியவர் அவர் (வ.3).